தடுப்பூசி - கீழ்பாக்கம் 2 குழந்தைகள் மரணம்

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு குழந்தைகள் உயிரிழப்புக்குத் தடுப்பூசியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவடியைச் சேர்ந்த ராசாத்தி என்பவருக்குக் கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அதே போன்று திருமழிசையைச் சேர்ந்த சரண்யா என்பவருக்குக் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இரு குழந்தைகளுக்கும் காசநோய்க்கான தடுப்பூசி போடப்பட்டு இரு குழந்தைகளும் வீடு திரும்பின. ஆனால் வீடு திரும்பிய இருகுழந்தைகளுக்கும் மூச்சுத் திணறல், வயிற்றில் வீக்கம், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டது. இக்குழந்தைகள் மீண்டும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.
இக்குழந்தைகளின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் தவறான மருத்துவமே காரணம் எனக்கூறி உறவினர்கள் கொந்தளித்தனர். தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் உறவினர்களை சமாதானப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, அவர்கள் குழந்தைகளின் உடலைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினர்.
இப்பிரச்சனை தொடர்பாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளின் இறப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"இறந்துபோன இரண்டு குழந்தைகளும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தன. இது, காற்றில் பரவும் நோய் என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் எந்த வகையில் இந்தக் குழந்தைகள் பராமரிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. இந்த பாக்டீரியா தொற்றால், குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டன. எனவேதான் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் இறந்தன.

1978-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பூசி போடப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இந்தத் திட்டத்தால் பயன் பெறுகிறார்கள். மத்திய அரசு கொடுக்கும் தடுப்பு மருந்துகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தடுப்பூசிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தடுப்பூசி போடப்படும் எந்தக் குழந்தையும் உயிரிழக்காது" என்று அவர் தெரிவித்தார்.
எனினும், நல்ல உடல்நலத்துடன் பிறந்த குழந்தைகள் வேறு எந்த மருத்துவமும் செய்யப்படாத நிலையில், உடல்நலம் கெட்டு இறந்ததற்கு மருத்துவமனையில் போடப்பட்ட தடுப்பூசியே காரணம் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment